ஷா ஆலம், செப்டம்பர் 18:
சிலாங்கூர் ஹிஜ்ரா கடனுதவி திட்டம் இது வரையில் ஏறக்குறைய 41,000 வணிகர்களின் வியாபாரத்தை மேம்படுத்த வழி வகுத்துள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இந்த கடனுதவி, தொழில் முனைவர்களின் பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொண்டு இருந்தது மட்டுமில்லாமல் அவர்களின் வருமானத்தை அதிகரித்து வருகிறது என்றார்.
” பரிவுமிக்க அரசாங்கம் என்ற கோட்பாட்டை கொண்டு செயல்படும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து சிறுதொழில் முனைவர்களுக்கு வியாபாரத்தை பெருக்க உதவி நல்கும்,” என்று நேற்று சுல்தான் அலாம் ஷா பொருட்காட்சி சாலையில் நடைபெற்ற ‘சிலாங்கூர் மந்திரி பெசாருடன் புதிய மலேசியா’ எனும் விவாத மேடையில் கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
இதனிடையே, அஸ்மின் அலி மேலும் கூறுகையில் மாநில அரசாங்கம் கடனுதவி தொகையை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அப்படி தேவை ஏற்பட்டால் கடனுதவியை நீண்ட காலத்திற்கு நீட்டிப்பும் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மாநில அரசாங்கம் இது வரை ரிம 270 மில்லியனை இத்திட்டத்தில் செலவிட்டுள்ளது என்று அஸ்மின் அலி கூறினார்.
” தற்போது நாம் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். ஹிஜ்ரா சிலாங்கூர் கடனுதவி திட்டத்தின் உச்ச வரம்பாக ரிம 50,000 உள்ளது. தேவை ஏற்பட்டால் மொத்த கடனுதவி தொகையை அதிகரிக்க மாநில அரசாங்கம் உத்தேசிக்கும். தற்போது கடனுதவி தொகையாக ரிம 1,000 இருந்து ரிம 50,000 வரையிலும் வட்டியில்லா கடனுதவியாக ஹிஜ்ரா இருந்து வருகிறது,” என்று தெரிவித்தார். சிலாங்கூர் ஹிஜ்ரா கடனுதவி திட்டம் பரிவுமிக்க மக்கள் நல திட்டங்களில் (ஐபிஆர்) முக்கிய திட்டம் என்று கூறினால் அது மிகையாகாது.
#கு. குணசேகரன் குப்பன்