ஷா ஆலாம் – சிலாங்கூர் மாநில அரசாங்கம் இணையம் வழி இலவச டியூசன் சேவையை அறிமுகம் செய்துள்ளது.குறிப்பாக இச்சேவை எஸ்.பி.எம் மாணவர்களை முன்னிலைப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
இந்த இலவச டியூசன் சேவை சிலாங்கூர் மாநில அறவாரியத்தின் கீழ் இயங்கும் என அதன் தலைமை இயக்குனர் ஷாவுரா ஷக்ரி தெரிவித்தார்.சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பரிவு மிக்க திட்டத்தின் கீழ் ஒன்றாக விளங்கிடும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 18,000 எஸ்.பி.எம் மாணவர்கள் நன்மை அடையாவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்த இலவச டியூசனின் மூலம் அறிவியல்,கணிதம்,இயற்பியல் மற்றும் கூடுதல் கணிதம் அடங்கிய மொத்தம் ஐந்து பாடங்களுக்கு இந்த டியூசன் சேவை பெரும் பங்காற்றும் என்றார்.
இந்த அரும் சேவையின் மூலம் இளம் தலைமுறையினர் அதிகமான வாய்ப்பினை அனுபவிப்பதற்காக சாத்தியம் இருப்பதையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.
இராஜா துன் ஊடா நூல்நிலையத்தில் இணையம் வழி இலவச டியூசன் சேவையை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.இத்திட்டம் அதன் இலக்கை அடைய உறுதுணையாக இருக்கும் சிலாங்கூர் பொது நூலக வாரியத்திற்கு அவர் தனது நன்றியினை பதிவு செய்துக் கொண்டார்.
இந்த இலவச டியூசன் சேவையின் மூலம் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடங்களை இணையம் வாயிலாக கற்றுக்கொள்ளலாம்.இதில் வீடியோ சேவையும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்காக பாடங்களை நன் நிலையில் புரிந்துக் கொள்ளவும் அதன் மூலம் அவர்கள் அதில் ஆளுமையும் ஆற்றலும் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வெ.1500க்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பத்தினர் www.smartselangorfreetuition.com இந்த இணையத்தில் முறையாக பதிவு செய்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
மாநில அரசாங்கத்தின் இந்த இணையம் வழி இலவச டியூசன் வாயிலாக கற்று அதன் மூலம் 2017ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சியினை பதிவு செய்யும் 5 மாணவர்களுக்கு வெ.25,000 வெகுமதி காத்திருப்பதாகவும் அவர் பெருமிதமாய் கூறினார்