செப்பாங், ஆகஸ்ட் 26:
சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இகியா நிறுவனத்தின் முதலீடு பெரும் தூண்டுகோலாக அமையும். சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில், மிகப்பெரிய நிறுவனமான இகியா தனது ஆசியா பசிபிக் வட்டாரத்தின் விநியோக மையமாக சிலாங்கூரை தேர்ந்தெடுத்தது மாநிலத்தின் மீது உள்ள நம்பிக்கையை உணர்த்துகிறது.
” இகியா நிறுவனம், பூலாவ் இண்டாவில் தனது விநியோக மையத்தை ரிம 1 பில்லியன் மதிப்பிலான, உலகத்திலே மூன்றாவது மிகப் பெரிய மையமாக நிறுவ உள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு நிறைய காத்துக் கொண்டிருக்கும். தொழில் நுட்ப திறன் வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை கண்டிப்பாக இருக்கும். இது சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துகோலாக இருக்கும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.
மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் தனது குழுவினரும் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு இகியா நிறுவனத்தின் தலைமையகமான ஜூரீச், சுவிட்சர்லாந்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
இகியா நிறுவனம் பூலாவ் இண்டாவில் அமைக்கப் போகும் மையம் உலகத்திலே இகியா சிக்காகோ, அமெரிக்கா மற்றும் இகியா டுசல்டோர்ஃப், ஜெர்மனி அடுத்து மூன்றாவது மிகப் பெரிய விநியோக மையமாக உருவாகும் என்று தெரிவித்துள்ளது.
இந்த விநியோக மையம் ஆசியான் வட்டாரத்தில் உள்ள 12 இகியா கிளைகளுக்கு உற்பத்தி பொருட்களை விநியோகம் செய்யும்.
#கேஜிஎஸ்