ஷா ஆலம், ஆகஸ்ட் 1:
கடந்த ஜூலை 31-இல் வெளியிடப்பட்ட 2016-இன் தேசிய தணிக்கை இலாகாவின் அறிக்கை அடிப்படையில் நாட்டின் 12 மாநிலங்களில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கடன் பினாங்கு மாநிலத்திற்கு பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளது. மேற்கண்ட அறிக்கையின் படி, சிலாங்கூர் ரிம 14.67 மில்லியன் மட்டுமே கடன் உள்ளதாக காட்டுகிறது. 2015-இல் கடன் அளவு ரிம 27.09 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பினாங்கு மாநிலம் கடந்த ஆண்டில் எந்த ஒரு கடன் தொகையும் இல்லை என்றும் கடந்த 2015-ஆம் ஆண்டில் ரிம 1.49 மில்லியன் மதிப்பிலான கடன் தொகை இருந்தது என்று தணிக்கை இலாகாவின் அறிக்கை கூறுகிறது.
தேசிய தணிக்கை இலாகாவின் அறிக்கையில், பகாங் மாநில கடன் தொகை முதல் நிலையில் இருப்பதாக கூறுகிறது. கடந்த ஆண்டில் பகாங் மாநிலத்தின் கடன் ரிம 1,087.93 மில்லியனாகவும், 2015 இறுதியில் ரிம 929.85 மில்லியன் ஆக இருந்தது என்று தணிக்கை இலாகா தெரிவித்துள்ளது.
பகாங்கை தொடர்ந்து கெடா மாநிலம் இரண்டாவது இடத்தில் ரிம 1,028.85 மில்லியன் மதிப்பிலான கடன் தொகை இருந்து வருகிறது. கடந்த 2015-இல் கடன் அளவு ரிம 1,027.69 மில்லியன் இருந்தத என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் திரெங்கானு மாநிலமும் நான்காவது இடத்தில் மலாக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களின் கடன் தொகை 2015-இல் ரிம 3.985 பில்லியனில் இருந்து கடந்த ஆண்டு ரிம 4.225 பில்லியனை எட்டியது என்று அறிக்கை கூறுகிறது.
2016-இன் தேசிய தணிக்கை இலாகா, நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக 353 பரிந்துரைகளை மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
#கேஜிஎஸ்