ஷா ஆலம், ஆகஸ்ட் 7:
சிலாங்கூர் உணவு பெருவிழா 2017 ஏற்பாடுகள் கடந்த 2015-இல் தொடங்கியது முதல் இன்றுவரை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது என சிலாங்கூர் மாநில இளையோர், விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறினார். மலேசியாவில் முதல் நிலை உணவு பெருவிழாவான இந் நிகழ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு பொது மக்களின் பேராதரவை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அமிரூடின் மேலும் கூறுகையில் பெருவிழாவுக்கு வருகை புரிந்த பொது மக்களிடம் கென்டுரியான் அங்கம் நடைபெறாமல் போனதிற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
” ஏற்பாட்டு குழுவினரின் மற்றும் மாநில அரசாங்கத்தின் சார்பிலும் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனாலும் பொது மக்களின் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளது பெருமிதம் அளிக்கிறது. இந்த பெருவிழாவில் பல்சுவை உணவிற்கு பஞ்சமில்லை,” என்று நேற்று இரவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
இதனிடையே, ‘மயக்கம் வரையில் டுரியான் சாப்பிடுவோம்’ என்ற நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் 15 டன் டுரியான் பழங்களை ஏலத்தில் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தனர். டுரியான் பழங்கள் காயாக இருந்ததால் ‘கென்டுரியான் 2017’ நிகழ்ச்சியை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
#கேஜிஎஸ்