ஷா ஆலம், ஆகஸ்ட் 28:
மாநில அரசாங்கம், கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாகத்தை மேலும் மற்ற ஊராட்சி மன்றங்களுக்கு விரிவுபடுத்த விருப்பம் கொண்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி, சட்ட விரோத தொழிற்சாலை மற்றும் புதிய கிராம மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா கூறினார். மந்திரி பெசார் பெறுநிறுவனத்தின் (எம்பிஐ) கீழ் இயங்கும் கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் வெற்றிகரமாக திடக்கழிவு அகற்றும் பணியில் ஜூலை 2016-இல் இருந்து செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். சிறந்த முறையில் நிர்வகிக்கும் முறையில் பொது மக்களின் புகார்கள் 90% குறைந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
” நாம் தொடர்ந்து கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சேவையை மற்ற ஊராட்சி மன்றங்களுக்கு விரிவுபடுத்த விருப்பம் கொண்டுள்ளோம். இதன் மூலம் திறன் மிக்க மற்றும் முறையான திடக்கழிவு அகற்றும் பணி முழுமை பெறும். மாநில மக்கள் ஊராட்சி மன்றங்களின் சேவையில் மனநிறைவு அளிக்கும் வகையில் இருப்பதாக அண்மைய ஆய்வுகள் காட்டுகிறது. ஆனாலும், சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து துப்புரவு செய்யும் பணிகள், பொது வசதிகள் மற்றும் குற்றங்களை தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.
இதற்கு முன்பு, மெர்டேக்கா சென்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் 72% அல்லது 8,640 சிலாங்கூர் பொது மக்கள் மாநில அரசாங்கம் மற்றும் ஊராட்சி மன்றங்கள் மீது மனநிறைவு அடைவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 2016-இல் இருந்து கிள்ளான் நகராண்மை கழகத்தின் திடக்கழிவு அகற்றும் பணியில் செயல்பட்டு வரும் கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், அதன் தொடக்கத்தில் 800 புகார்களை பதிவு செய்துஉள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் ஏழு புகார்களை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.