செப்பாங், ஆகஸ்ட் 4:
செப்பாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்பி) செப்பாங் மாவட்டத்தில் எட்டு பேருந்துகளை ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச சேவை திட்டத்தில் இணைத்துள்ளது. மேலும் இரண்டு புதிய வழித்தடங்களை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அதிகாரப்பூர்வமாக ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவையை தொடக்கி வைத்தார். தாமான் கெமிலாங் பொது மண்டபத்தில் இந்த தொடக்க விழா நடைபெற்றது.
இதன் மூலம் செப்பாங் நகராண்மை கழகம் மொத்தம் மூன்று வழித்தடங்களை பெற்றிருக்கும். காலை மணி 6 தொடங்கி இரவு 10 மணி வரை பத்து பேருந்துகளோடு இலவச பேருந்து சேவை தினந்தோறும் பொது மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 17-இல் கிள்ளான் நகராண்மை கழகத்தின் புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் மொத்தம் 98 பேருந்துகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் சிலாங்கூர் முழுவதும் செயல்படும் என்று கூறினார்.
மேலும் கூறுகையில், அடுத்து ஐந்து ஊராட்சி மன்றங்கள் இரண்டு புதிய வழித்தடங்களை பெறவிருக்கின்றன. ஷா ஆலம் மாநகராட்சி மன்றம், சுபாங் ஜெயா நகராண்மை கழகம், அம்பாங் ஜெயா நகராண்மை கழகம், காஜாங் நகராண்மை கழகம் மற்றும் செப்பாங் நகராண்மை கழகம் ஆகிய ஐந்து ஊராட்சி மன்றங்களே இரண்டு புதிய வழித்தடங்களோடு செயல்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிள்ளான் நகராண்மை கழகத்தை தவிர ஒரு புதிய வழித்தடம் பெறவிருக்கும் ஊராட்சி மன்றங்கள்; செலாயாங் நகராண்மை கழகம், கோலா லங்காட் மாவட்ட மன்றம், உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம், சபாக் பெர்னாம் மாவட்ட மன்றம் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் போன்றவை ஆகும்.
இதனிடையே எம்பிஎஸ்ஏ மற்றும் எம்பிஎஸ்பி தலா எட்டு புதிய பேருந்துகளை பெற்றுள்ளது. மேலும் எம்பிஏஜே (7), எம்பிஎஸ் (6), எம்பிஎஸ்ஜே, எம்பிகே மற்றும் எம்பிகேஜே ஆகிய ஊராட்சி மன்றங்கள் தலா நான்கு பேருந்துகள், எம்டிகெஎஸ் (2), மற்றும் எம்டிகெஎல், எம்டிஎச்எஸ், எம்டிஎஸ்பி தலா ஒரு பேருந்து கூடுதலாக பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
#கேஜிஎஸ்