NATIONAL

அன்வார் கோலா லம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்

கோலா லம்பூர், செப்டம்பர் 20:

கெஅடிலான் மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகரான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் கோலா லம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

கோலா லம்பூர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜைனினா முகமட் ஜைன் கூறுகையில், அன்வார் எந்த சுகாதார பிரச்சனையை எதிர் நோக்கவில்லை என்றும் சில நாட்களுக்கு மருத்துவ நிபுணர்களின் பரிசோதனைக்கு பிறகு சிறைச்சாலைக்கு மீண்டும் திரும்புவார் என்று கூறினார்.

”   இது ஒரு திட்டமிட்ட பரிசோதனை ஆகும். மருத்துவ நிபுணர்கள் அன்வாரை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள்,” என்று கூறினார்.

இதற்கு முன்பு, கெஅடிலான் கட்சியின் தொடர்பு குழு இயக்குனர் பாஃமி பாஃட்சில் கூறுகையில், சுங்கை பூலோ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் அன்வார் செவ்வாய்க்கிழமை 2 மணி அளவில் இரத்த அழுத்தம் குறைவாக  இருந்ததால் கோலா லம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஃமி பாஃட்சில் மேலும் கூறுகையில், அன்வார் எல்லா தரப்பினரையும் நாட்டில் மாற்றம் ஏற்பட முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கெஅடிலான் மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். மக்களின் பிரச்சினைகளை முன்னுரிமை கொடுத்து போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கேட்டுக் கொண்டார்.

#கேஜிஎஸ்


Pengarang :