ஷா ஆலம், செப்டம்பர் 29:
கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா தனது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ததை மீட்டுக் கொண்டார். கடந்த 2012-இல் காவல்துறை பயிற்சி மையத்தில் (புலாபோல்) இருந்து அனுமதி இல்லாமல் வெளியானதிற்கு கிடைக்கப் பெற்ற தண்டனைக்கான மேல்முறையீட்டை இன்று மீட்டுக் கொண்டு சிறைக்கு சென்றார். பத்து நாடாளுமன்ற உறுப்பினரான தியான் சுவா செஸன் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையான ஒரு மாத சிறையை ஏற்க இருக்கிறார்.
மூன்று மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ வீரா மொக்தாரூடின் பாக்கி, டத்தோ ஸ்ரீ ஸக்காரியா சேம் மற்றும் டத்தோ அப்துல் காரிம் அப்துல் ஜாலில் ஆகியோர் தியான் சுவா தனது மேல்முறையீட்டை மீட்டுக் கொண்டதை ஏற்றுக் கொண்டனர். ஒரு மாத சிறைத் தண்டனை இன்றிலிருந்து தொடங்குகிறது என்று தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 23, 2014-இல் செஸன் நீதிமன்றம், ஏப்ரல் 29, 2012-இல் பெர்சே 3.0 பேரணியில் கலந்து கொண்ட பின் கைது செய்து புலாபோலில் இருந்து அனுமதி இல்லாமல் வெளியானதிற்கு தியான் சுவா மேற்கண்ட தண்டனையை பெற்றார். மேலும் உயர் நீதிமன்றத்திலும் முறையீட்டு தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#கேஜிஎஸ்