ஷா ஆலம், அக்டோபர் 30:
பிரதமர்துறை இலாகாவிற்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்த ரிம 17.4 பில்லியன் வீண் விரயம் என்று டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவருமான அஸ்மின் அலி, மேற்கண்ட மிகப் பெரிய ஒதுக்கீடு ஒருவரின் கீழ் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. இந்த ஒதுக்கீட்டை கண்காணித்து வரவு செலவுகள் முறையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்றார்.
” நிர்வாகச் செலவுகள் மிக அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது. மக்களின் வாழ்க்கை செலவினங்கள் மோசமான சூழ்நிலையில் இருக்கும்போது பிரதமரும் மற்றும் பிரதமர்துறையும் தொடர்ந்து ஆடம்பர செலவுகளையும் மற்றும் மக்கள் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்,” என்று பிஎன்எஸ்பியின் ‘ஜோம் சேஹாட்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.
மேலும் கூறுகையில் 2017 வரவு செலவுத் திட்டத்தை விட ரிம 1.5 பில்லியன் அதிகமாக உள்ளது என்றும், இது மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 6.2% என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசுகையில், சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, நஜீப் மறைமுகமாக சிலாங்கூரின் நன்முயற்சிகளை ஆதரிப்பதாக கூறினார்.
” பிரதமர் நஜீப் ரசாக்கின் வரவு செலவு திட்டத்தில் செய்யப்பட்ட அறிவிப்புகள் பல சிலாங்கூர் மாநிலத்தை பின்பற்றி இருக்கிறார். இறுதியில் பிரதமர் நமது திட்டங்களின் வெற்றியை ஒத்துக் கொண்டு இருக்கிறார்,” என்று விவரித்தார்.
#வீரத் தமிழன்