SELANGOR

போர்ட் கிள்ளான் சட்ட மன்ற தீபாவளி திறந்த இல்ல நிகழ்வு கோலகலமாக நடந்தேறியது

பன்டமாரான், நவம்பர் 12:

சிலாங்கூர் மாநிலத்தில் தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பயணத்தில் போர்ட் கிள்ளான் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு  அஸ்மிஸாம் ஸாமான்ஹூரி மற்றும் கிள்ளான் நகராண்மை கழக உறுப்பினர் திரு ஆதி சரவணன் ஆகியோர் ஏற்பாட்டில் தீபாவளி விருந்துபசரிப்பு பென்டாமர் இன்டாவில் மக்களின் பேராதரவோடு நடந்தேறியது.

ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாந்தியாகோ, கிள்ளான் நகராண்மை கழகத் தலைமை உறுப்பினர் யியு பூன் லாய், இந்திய கிராமத்து தலைவர் திரு கிருஷ்ணன் ஆகியோரின் சிறப்பு வருகை நிகழ்ச்சிக்கு மேலும் பொழிவை ஏற்படுத்தியது என்று கூறினால் அது மிகையாகாது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏற்பாட்டுக் குழு தலைவர் ஆதி சரவணன், ஒருமித்த சிந்தனையோடு செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்பதை நிகழ்ச்சி நிரூபித்துள்ளது என்றார். மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கினால் கண்டிப்பாக நமது நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு கொடுப்பார்கள். சுற்று வட்டார பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு விருந்துபசரிப்பிலும் மற்றும்  கலைநிகழ்ச்சியையும் கண்டு களித்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் உரையாற்றிய போர்ட் கிள்ளான் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அஸ்மிஸாம் ஸாமான்ஹூரி, தொகுதி வாக்காளர்களுக்கு தம்மால் இயன்றவரை உதவிகளை செய்து வருவதாக கூறினார். இந்திய சமுதாயம், பல்வேறு திட்டங்களை மாநில அரசாங்கம் வழங்கினாலும் அதில் பதிந்துக் கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் இன்றுவின் ஆசிரியர் கு. குணசேகரன் கலந்து கொண்டு உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

#வீரத் தமிழன்


Pengarang :