SELANGOR

சுஹாய்மி: அஸ்வான் அலியின் வேலைக்கு “நல்ல கூலி” கிடைத்திருக்கும்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 21:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமைத்துவத்தின் கீழ் மாநில அரசாங்கம் ஊழல் மற்றும் பதவி துஷ்பிரயோகம் தலைவிரித்து ஆடுகிறது என்ற நடிகர் அஸ்வான் அலி எடுத்துரைத்த குற்றச்சாட்டை மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் மாண்புமிகு சுஹாய்மி ஷாபியி மறுத்தார். இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் உண்மையில்லை என்று தெரிவித்தார்.

” எனக்கு என்ன ஆதாரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது என்று தெரியாது, ஆனாலும் இந்த விவகாரத்தில் சிறந்த முறையில் திட்டமிட்டு செயல்படுத்தப் படுகிறது. இதில் சிறந்த ஒரு இயக்குனரின் கை வண்ணத்தில் இயக்கப் பட்டு அஸ்வான் அலியால் நடிக்கப் படுகிறது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

நேற்று அஸ்வான் அலி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சென்று ‘ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை’ சமர்ப்பித்தார். சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் உடன் பிறந்த சகோதரரான அஸ்வான் காலை மணி 10.05-க்கு கருப்பு நிறத்தில் ஆன தோயோத்தா ஹால்பாட் வாகனத்தில் புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் வந்து இறங்கினார். ஊழல் ஆதாரங்கள் உள்ளன என்று ஒரு கடித உறையை காட்டினார்.

” மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தொழில்முறையில் இந்த விசாரணையை நடத்த வேண்டும். எந்த ஒரு விசாரணையையும் மேற்கொள்ளலாம். ஆனால் எல்லாமே சட்ட வரையறைக்குள் இருக்க வேண்டும்,” என்று விவரித்தார். ஆனாலும் சுஹாய்மி இந்த விடயத்தில் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்கள்  குறித்து சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார்.

கு. குணசேகரன் குப்பன்


Pengarang :