புத்ரா ஜெயா, மே 19:
மத்திய அரசாங்கத்தின் புதிய பொருளாதார நலன் அமைச்சுக்கு மாற்றலாகி செல்வதற்கு டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவியை துறக்க தயாராக இருப்பதாக கூறினார். ஆனாலும், இன்று வரை சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக இருந்து வருவதாக கூறினார். மேன்மை தங்கிய சிலாங்கூர் மன்னர், சுல்தான் ஷாராஃபூடின் இட்ரிஸ் ஷாவை சந்தித்த பிறகே தனது பதவி தொடர்பில் முடிவு எடுக்க உள்ளதாக அஸ்மின் அலி விவரித்தார்.
” பினாங்கு மற்றும் ஜோகூர் மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்கள் சிலாங்கூர் மாநில வெற்றிகளை பின்பற்றினால் சிறந்த அடைவு நிலையை பெற முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை மிக விரைவில் சந்தித்து, பிரதமர் உத்தேசித்துள்ள புதிய பதவியை பற்றி அவரிடம் விளக்கிய பிறகு எனது முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இன்று வரை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியே. மத்திய அரசாங்கத்திற்கு வலு சேர்க்கும் நோக்கில் எனது சேவை தேவைப்பட்டால் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவியை துறக்க தயார்,” என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களை பிரதான தலைமைத்துவ வாரியத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.