தமிழ் இலக்கியத்தின் பல சிறப்புக்கூறுகளைப்பற்றி இதுவரை எத்தனையோ உலக மாநாடுகள் நடந்துள்ளன. ஆனால் தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சியை நோக்கமாய்க் கொண்டு இதுவரை உலக அளவில் மாநாடெதுவும் நடந்ததில்லை. அக்குறையைப் போக்கும் நோக்கொடும் வளர்ச்சிக் குன்றிக்கிடக்கும் அதற்கு ஓர் உந்துதல் ஏற்படுத்த வேண்டுமென்னும் விழைவொடும் இம்மாநாட்டைக் கூட்ட, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை ஆதரவுடன் மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் முன்வந்துள்ளது. எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகள், தாய்மொழிப் பற்றொடும், இலக்கிய நாட்டமுடனும், பண்பாட்டுச் செழுமையொடு, விழுமியங்களைப் போற்றி வளர வேண்டுமென்பதனைக் கருத்தில் கொண்டு இயக்கம் இப் பணியை மேற்கொண்டுள்ளது.