SELANGOR

பிரதமர்: கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!!!

சுபாங் ஜெயா ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் விவகாரத்தில் கலவரம் செய்தவர்கள் மற்றும் அவர்களுக்கு சூத்ரதாரிகளாக இருப்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மகாதிர் சூளுரைத்தார்.

“கலவரம் செய்த மற்றும் நமது பாதுகாப்பு படையினர், ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் பணியாளர்களுக்கு காயம் விளைவித்ததில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் சொத்துகளை சேதப்படுத்திய குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

“சூத்திரவாதிகள், யாராவது இருந்தால், அவர்களும்கூட முறையான தண்டனையை எதிர்கொள்வதிலிருந்து தப்பிக்க முடியாது,” என்று அவர் விடுத்த ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

இச்சம்பவங்கள் மீது புலன்விசாரணை நடத்திய போலீஸ் தமக்கு விளக்கம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

“தொடக்க விசாரணையிலிருந்து இதில் குற்றமான கூறுகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது…இது கோவில் இடமாற்றம் பற்றியதாக இருந்த போதிலும், இனம் அல்லது சமயப் பிரச்சனை இதில் எழவிலை”, என்று மகாதிர் மேலும் கூறினார்.

கோவில் வளாகத்தினுள் குழப்பம் விளைவித்த குற்றவாளிகளின் பொறுப்பற்ற நடவடிக்கை குறித்து அரசாங்கம் வருந்துகிறது என்றாரவர்.

வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களை அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

“இது ஒரு கிரிமினல் குற்ற விவகாரம், இதை இதர கூறுகளுடன் தொடர்புபடுத்தக் கூடாது என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்”, என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :