SELANGOR

உணவகங்கள் புகை பிடிக்கத் தடை : சட்டமன்ற உறுப்பினர் வரவேற்பு

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 2:

உணவகங்களில் புகை பிடிக்கத் தடைவிதிக்கும் சட்டம் கடந்த ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படுவதை பொது மக்கள் பலர் வரவேற்கின்றனர்.
புகை பிடிக்கும் நபருக்கு மட்டுமின்றி அருகில் இருப்போரின் நலனுக்கும் ஆபத்தை விளைவிப்பதால் இந்தத் தடை அவசியமான ஒன்று என ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹாலிமி அபு பக்கார் தெரிவித்தார்.

‘நான் புகைபிடிக்க மாட்டேன். ஆயினும் மலேசிய சுகாதார அமைச்சு அமல்படுத்தியுள்ள இந்தச் சட்டம் பெரிதும் வரவேற்கத்தக்கது’.
இந்தத் தடை தங்கும் விடுதி மற்றும் ஆடை சுத்தம் செய்யும் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் பரிந்துரையும் ஒரு சிறந்த நடவடிக்கையாகும் என்று சிலாங்கூர் மீடியாவிடம் அவர் கூறினார்.

எனவே, மக்கள் இந்தச் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஸ்ரீ செத்தியா சட்டமன்ற சேவை மையத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.
முன்னதாக, இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி அமலுக்கு வந்த இந்தச் சட்டம் குளிர் சாதனம் பொருத்திய உணவகம், சாலையோரம் அமைந்துள்ள அங்காடி உணவகம் உள்ளிட்ட அனைத்து உணவகங்களுக்கும் பொருந்தும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.

இந்தத் தடையை மீறும் உணவக உரிமையாளர்கள் மீது 1983ஆம் ஆண்டு உணவு சட்டம் மற்றும் 2004ஆம் ஆண்டு புகையிலை கண்காணிப்பு (சட்டவிதி 324) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.


Pengarang :