செமினி, பிப்.28-
அம்னோ செய்யும் அனுதாப அலை பிரச்சாரத்தில் மயங்கிட வேண்டாம் என்று கெஅடிலான் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.
வாக்காளர்களை அச்சமூட்டும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
“அவர்களின் பிரச்சாரத்தில் மயங்கிவிடாதீர்கள். போஸ்கூ (நஜீப்) இப்பொழுது டாக்சி, மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளில் வருகிறார். முன்பு அவர் பிரைவெட் ஜெட்டில் பயணித்ததை நாம் மறந்துவிடக் கூடாது” என்று அஸ்மின் நினைவுறுத்தினார்.
இன்று பார்ப்பதை வைத்து மட்டும் நாம் மதிப்பிடக் கூடாது. மக்கள் இன்று சந்திக்கும் அனைத்து பிரச்னைகளும் யாரால் வந்தது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது என்றார் அவர்.
பக்காத்தான் கூட்டணிக்கு வாக்களித்தால் ஜசெக அதிகாரத்திற்கு வந்துவிடும் என்று 69 விழுக்காடு வாக்காளர்களாக இருக்கும் மலாய்க்காரர்களின் மத்தியில் அம்னோவும் பாஸ் கட்சியும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன என்று அவர் குற்றஞ்சாட்டினார்.