சிரம்பான், பிப்.5:
இங்குள்ள பள்ளி ஒன்றில் இந்து சமய மாணவன் ஒருவன் இஸ்லாமிய கல்வியைக் கற்க வற்புறுத்தப்பட்டதாக நேற்று வெளியான ஊடக தகவலில் உண்மை இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
அமைச்சு மேற்கொண்ட விசாரணையின் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளி அம்மாணவனை இஸ்லாமிய கல்வியைக் கற்க வற்புறுத்தவில்லை என்பதோடு கடந்த 2017ஆம் கல்வி ஆண்டு தொடங்கி இன்று வரை சம்பந்தப்பட்ட மாணவன் நன்னெறி பாடத்தை பயின்று வருவதும் தெரிய வந்துள்ளது என்று தலைமை கல்வி இயக்குநர் டத்தோ டாக்டர் அஸ்மின் செனின் கூறினார்.
“அந்த மாணவனின் பெற்றோர் பிறப்பு சான்றிதழிலை சமர்ப்பிக்காத போதிலும் அவனது தந்தை தெரிவித்த விபரங்களின் அடிப்படையில் அம்மாணவன் நன்னெறி பாட வகுப்பில் பயில பள்ளி அனுமதித்துள்ளது” என்றார் அவர்.
முக்கிய ஆவணத்தை கொண்டிராத அந்த மாணவனை பள்ளியில் மாணவனாக பதிந்து கொள்ள கடந்த 2017ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் கல்வி இலாகா அனுமதி வழங்கியதாக அவர் தெரிவித்தார்.