ஷா ஆலம், மார்ச் 20-
சிலாங்கூர் விவேக வைஃபை இலவச சேவை திட்டத்தை மேற்கொள்ளும் குத்தகை நிறுவனத்திற்கு சிலாங்கூர் மாநிலம் கடந்தாண்டு 12.5 மில்லியன் வெள்ளி செலுத்தியதாக இன்று சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இலவச வைஃபை சேவையை மேற்கொள்ள டெலிகோம் மலேசியா நிறுவனமும் செல்கோம் மொபைல் நிறுவனமும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல், பசமை தொழில்நுட்பம், பயனீட்டாளர் விவகாரம் மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகாரத்திற்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லொய் சியான் கூறினார்.
தகவல் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவையை வழங்குவதற்காக கொண்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் இவற்றின் சேவைகள் கிடைக்கும் பகுதி ஆகியவற்றைக் கொண்டு சம்பந்தப்பட்ட இந்த நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன என்றார் அவர்.
அதேவேளையில், மூன்று மாத காலக் கட்டத்தில் 2.500 பகுதிகளில் ஹோட்ஸ்பாட் வசதியை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ள நிறுவனமாக இருப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் தகுதிகளில் ஒன்றாகக் கருதப்பட்டன என்று சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் ஹீ தெரிவித்தார்.