ஷா ஆலம், மார்ச் 8-
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பத்து தீகா சட்டமன்ற தொகுதியில் உள்ள பெண்களுக்கு 1,500 ரோஜாப் பூக்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
இந்த மலர் கொத்துகள் பாடாங் ஜாவா, செக்ஷன் 18, தாமான் பத்து தீகா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள், கிளினிக் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள பெண்களிடம் விநியோகிக்கப்பட்டதாக தொழில்முனைவர் மற்றும் புறநகர் மேம்பாடு மற்றும் பாரம்பரிய கிராம மேம்பாட்டுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
உலகளவில் இன்று அனுசரிக்கப்படும் மகளிர் தினத்தில் இந்தப் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த மலர்கள் விநியோகிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
மகளிர் தங்கள் கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றுவதோடு மன உறுதியை வலுப்படுத்தவும் இத்தகைய அங்கீகாரங்கள் அவசியம் என்று கேபிஜே மருத்துவமனையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ரோட்சியா கூறினார்.