கோலாலம்பூர், மார்ச் 11-
முடியாட்சி அரசியலமைப்பு கொள்கையின் அடிப்படையில் நாட்டில் நீதி மற்றும் நியாயமான ஆட்சி தொடரும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடுன் அல் முஸ்தாஃபா பில்லா ஷா உறுதியளித்தார்.
தமக்கு முன்னர் நாட்டை ஆட்சி புரிந்த மாட்சிமை தங்கிய சுல்தான் முகமது Vக்கு மாமன்னர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதேவேளையில், நாட்டின் 16ஆவது மாமன்னராகத் தாம் அரியணையில் அமர்வதற்கு அருள்புரிந்த இறைவனுக்கும் அவர் நன்றி கூறினார்.
“முடியாட்சி அரசியலமைப்பு கொள்கையின் அடிப்படையில் நாட்டில் நீதி மற்றும் நியாயமான ஆட்சி தொடரப்படுவது உறுதிப்படுத்தப்படும்” என்று மாமன்னர் உத்தரவாதம் அளித்தார்.
14ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் மாமன்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், நாட்டின் வளப்பம் மற்றும் சுபிட்சத்தைக் காப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் தம்மோடு இணைந்திருப்பர் என்றும் மாமன்னர் நம்பிக்கை தெரிவித்தார்.