கோலாலம்பூர், மார்ச் 18-
இந்தோனேசியா லோம்பாக் தீவில் ரிக்டர் கருவியில் 5 க்கும் மேற்பட்ட அளவில் நேற்று பதிவான நிலநடுக்கத்தில் சின் சியூவ் நாளேட்டின் துணை நிர்வாக ஆசிரியர் டத்தின் தை சியூவ் கிவ் மரணமடைந்தார்.
தமது பள்ளிப்பருவ நண்பர்கள் மற்றும் மகனுடன் லோம்போக்கில் சுற்றுலா மேற்கொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கச் சம்பவத்தில் அவர் பலியானார் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று நாடு திரும்பத் திட்டமிட்டிருந்த அந்த குழுவினர் கடந்த மார்ச் 14 முதல் அங்கு சுற்றுலா மேற்கொண்டிருந்தனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த அவரது மகன் ( வயது 20), தற்போது அந்தத் தீவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மரணமடைந்த சியுவ் கிம்மின் கணவர் சைனா பிரஸ் நாளேட்டின் தலைமை ஆசிரியர் டத்தோ தியோ யாங் கூன் தெரிவித்தார்.
முன்னதாக, ரிக்டர் கருவியில் 5.8 அளவில் மேற்கு இந்தோனேசியாவில் 24 கிலோ மீட்டர் சுற்றளவில் பதிவான முதல் நிலநடுக்கம் பிற்பகல் 2.07 மணிக்கு ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து ரிக்டர் கருவியில் 5.2 அளவில் பதிவான மற்றொரு நிலநடுக்கம் பிற்பகல் 2.07க்கும் ஏற்பட்டதாக அந்த மையம் கூறியது.