ஷா ஆலம், மார்ச் 21-
நியூசிலாந்து கிறிஸ்ட்செர்ச்சில் உள்ள பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தாக்குதலுக்கு பலியான மலேசியரின் குடும்பத்தினருக்கு சிலாங்கூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட் ரிஸ் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சம்பவத்தில் முகமது ஹாஸிக் முகமது தர்மிஸி உயிரிழந்த செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயருற்றதாக சுல்தான் கூறினார்.
குடும்ப உறுப்பினரை இழந்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு மன வலிமை வழங்குமாறு தாமும் தெங்கு பெர்மைசூரியும் இறைவனைப் பிரார்த்திப்பதாக தமது இரங்கல் செய்தியில் சிலாங்கூர் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவம் குறித்து தாம் மிகவும் துயருற்றிருப்பதாக சுல்தான் தமது அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவு செய்துள்ளார்.