ஷா ஆலம், மார்ச் 21-
தாமான் கனகபுரத்தில் 2017ஆம் ஆண்டு தொடங்கி கடந்தாண்டு வரையில் சட்டவிரோதமாக வர்த்தகம் புரிந்த 22 கடைகள் மீது பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது..
அந்த எண்ணிக்கையில் 18 கடைகளுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்ததாகவும் மற்ற கடைகளை ஊராட்சி துறையின் அமலாக்கத் தரப்பினர் இடித்துத் தள்ளிவிட்டதாகவும் ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
சட்ட விரோதமாக நடந்து வந்த வர்த்தக நடவடிக்கையில் முறையான அனுமதியின்றி நடத்தப்பட்ட 7 சிறார் பராமரிப்பு மையங்களும் அடங்கும். இது தவிர்த்து கார் மற்றும் லாரி விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 கடைகளும் ஒரு மோட்டார் சைக்கிள் காட்சிக் கூடமும் அடங்கும் என்று அவர் சொன்னார்.
சட்ட விரோத வர்த்தகத் தலங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் புள்ளி விபரம் குறித்து புக்கிட் காசிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் கேட்ட கேள்விக்கு இங் மேற்கண்ட விபரங்களைத் தெரிவித்தார்.