உலு கிள்ளான், ஏப்.29-
தாமான் கெராமாட் பெர்மாய் அடுக்குமாடி குடியிருப்பில் புளோக் எஃப் சுவர்களில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளைக் கண்டு சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளாக அங்கு வசிக்கும் ஹஸ்லின் ஹயாத்தி அகமது (வயது 46) என்பவர் அவரின் குடியிருப்பு எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்திலும் இந்த வீட்டில் முக்கிய ஆவணங்கள் இருப்பதையும் நினைத்து கவலையடைந்துள்ளார்.
“இந்த குடியிருப்பு திடீரென்று இடிந்து விழும் சமயத்தில் குறுகிய நேரத்தில் வீட்டினுள் உள்ள பிறப்புப் பத்திரம், வாகன உரிமைப் பத்திரம் போன்ற முக்கிய ஆவணங்களை எடுக்க இயலாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நாங்கள் வாழ்கிறோம்” என்றார் அவர்.
“அப்படி ஏதும் நிகழ்ந்தால், ஆண்டவனிடம் சரணடைவதைத் தவிர வேறு எதனையும் எங்களால் செய்ய இயலாது” என்று சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.