சிரம்பான், ஏப்.5-
தேசிய உருமாற்றத் திட்டத்தை பக்காத்தான் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதுவே இக்கூட்டணியின் மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது என்று கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அதிகார துஷ்பிரயோகம், ஊழல், நிதி வளத்தை திருடியவர்கள் மற்றும் மக்களை ஏமாற்றியவர்கள் ஆகியோரை நீதிமன்றத்தில் நிறுத்துவதும் இதன் உருமாற்றத்தில் அடங்கும் என்றார் அவர்.
“இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.. நாங்கள் பொய்யுரைப்பதில்லை, மிரட்டுவதில்லை அல்லது யாரையும் பழி வாங்குவதும் இல்லை. நாட்டின் கருவூலத்தை கொள்ளையடித்தவர்களுக்குத் தண்டனை வாங்கி கொடுப்பதோடு மக்கள் பணத்தைத் திரும்ப ஒப்படைக்கச் செய்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.
“இதில் விட்டுக் கொடுக்கும் போக்கு இல்லை. முந்தைய அரசாங்கம் என்னோடு கெஅடிலான் கட்சி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் மற்றும் பலரை நீதிமன்றத்தில் நிறுத்தியதோடு நில்லாமல் எங்களை நிர்வாணமாக்கி மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனால், இந்த அரசாங்கம் அது போன்று செயல்படாது. மாறாக, குற்றமிழைத்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை கிடைக்க செய்வது மட்டுமே எங்கள் பொறுப்பாகும்” என்று அன்வார் கூறினார்.