NATIONAL

எஸ்.ஆர்.சி : நஜீப்பின் முறையீடு தள்ளுபடி

கோலாலம்பூர், ஏப்.29-

எஸ்.ஆர்.சி. அனைத்துலக நிறுவனத்தின் நிதி தொடர்பில் தம்மீது சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளையும் நீக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் செய்த முறையீட்டை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பலவீனமாக உள்ளன என்ற தற்காப்பு தரப்பின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று நீதிபதி முகமது நஸ்லான் முகமது கசாலி தமது தீர்ப்பில் கூறினார்.
நஜீப் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டும் இருமுறை குற்றஞ்சாட்டப்படுள்ளதாகவும் முரண்பாடாக உள்ளதாகவும் கூறப்படும் வாதம் ஏற்புடையதல்ல என்றும் அவை ஒவ்வொன்றும் வேறுபட்டவை என்றும் அவர் தெரிவித்தார்.

 

“தற்காப்பு தரப்புக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் வாதி தரப்பு ஒப்படைத்துவிட்டது. இதுவரையில், இவ்வழக்கு ஏழு நாட்கள் நடைபெற்றுள்ளன. ஆவணங்களுடன் 21 சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களை அளித்துள்ளனர்” என்றார்..

“இதில் குழப்பம் உள்ளது என்ற தற்காப்பு தரப்பின் வாதத்தை ஏற்பது சிரமமாக உள்ளது” என்று நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.


Pengarang :