NATIONAL

என்.எஃப்.சி கழகத்தின் கடன்களைச் செலுத்த புதிய நிறுவனம் தயார்!

கோலாலம்பூர், மே 21:

தேசிய கால்நடை கழகத்தை (என்.எஃப்.சி) வாங்குவதற்கும் அதன் கடன் அனைத்தையும் 3 மாத காலக் கட்டத்தில் திரும்பச் செலுத்துவதற்கும் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் கடந்தாண்டு அக்டோபர் 25ஆம் தேதி இணக்கம் தெரிவித்துவிட்டது. ஆயினும், அது அரசாங்கத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் முடிவிற்காக என்.எஃப்.சி கழகம் காத்திருப்பதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது சாலே இஸ்மாயில் கூறினார்.

“இந்நிறுவனத்தை வாங்க முன்வந்திருக்கும் புதிய நிறுவனமானது என்.எஃப்.சி. கழகத்தின் அனைத்து கடன்களுக்கும் பொறுப்பேற்க இணக்கம் தெரிவித்துள்ளது. மேலும், அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய பாக்கியைச் செலுத்துவதற்கும் அது தயாராக இருக்கிறது” என்றார் அவர்.

இந்த நோக்கம் குறித்து கடந்தாண்டு நவம்பர் 21ஆம் தேதியிடப்பட்ட கடிதம் மூலம் நிதியமைச்சர் லிம் குவான் எங்கிற்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் என்றும் அவர் சொன்னார்.

முன்னதாக, இவ்வாண்டு ஏப்ரல் 30ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், என்.எஃப்.சி கழகம் அரசாங்கத்திடம் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் தாமதமாகச் செலுத்துவதற்கான கூடுதல் வட்டி உட்பட 253.6 மில்லியன் வெள்ளி இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது என்று லிம் குவான் எங் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :