புத்ரா ஜெயா, மே 14-
தேசிய ஊழல் தடுப்பு திட்டம் மற்றும் சொத்துகளை அறிவிப்பது ஆகியவை முக்கிய அடைவு நிலை குறியீட்டில் (கேபிஐ) சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய நிர்வாக ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஊழல் தடுப்பு மையம் (ஜிஐஏசிசி) அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
அதே வேளையில், தங்கள் அமைச்சின் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் அனைவரும் தங்கள் சொத்து விபரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தெரிவிப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த சொத்து அறிவிப்பு நடைமுறையானது அமைச்சர் மற்றும் துணை அமைச்சர் என்றளவில் மட்டும் நின்றுவிடாது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ஊழல் தடுப்பு மீதான சிறப்பு அமைச்சரவை செயற்குழுவின் 8ஆவது கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் தெரிவித்தார்.
“அரசாங்கத்தைக் குறை கூறும் அதிகாரத்தைக் கொண்டுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும்” என்றார் அவர்.