சிப்பாங், மே 8-
திருமணமான பெண்கள் தங்கள் கனவுகளை எந்தவொரு காரணத்திற்காகவும் விட்டு விடக் கூடாது என்கிறார் அமெரிக்கா லாஸ் வேகாஸில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு மிஸச் வேர்ல்டு எனப்படும் திருமதி உலக அழகிப் போட்டியில் மூன்றாவது இடத்தை வென்ற கோகிலம் கதிர்வேலு.
திருமணமானதோடு வாழ்க்கை நிறைவுற்றதாகக் கருதாமல், நாடு மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கு பல்வேறு பங்களிப்புகளை தங்களால் வழங்க முடியும் என்று இவர்கள் நம்ப வேண்டும் என்றார் 34 வயது கோகிலம்.
“இந்த அழகு ராணி போட்டியில் வென்றதன் மூலம் மற்றவர்களுக்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். மணமானவுடன் வாழ்க்கை முடிவதில்லை. பெரிய இலக்குகளையும் கனவுகளையும் அனைவரும் நோக்கிப் பயணிக்க வேண்டும்” என்றார்.
‘ஒரு பெண் மணமுடித்ததுடன் அவர் குடும்ப மாதுவாக அல்லது தாயாக இருந்தாலும், பல்வேறு தொழில்களைப் புரிய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்” என்று பெர்னாமாவிடம் கோகிலம் தெரிவித்தார்.
கோலாலம்பூரைச் சேர்ந்த கோகிலத்திற்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 36 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இந்தப் பட்டத்தை இவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.