புத்ரா ஜெயா, மே 9-
பக்காத்தான் ஹராப்பானுக்கு அனைத்து இன, சமய மக்களின் ஆதரவும் தேவை. எனவே அரசாங்கம் மீது அனைத்து தரப்பும் திருப்தியுறுவதை உறுதி செய்ய இக்கூட்டணி கடுமையாக உழைக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
அரசாங்கம் தங்கள் இனத்தின் மீது கவனம் செலுத்தாமல் இதர இனங்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக நாட்டு மக்கள் அனைவரும் நினைக்கின்றனர் என்று பக்காத்தான் அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நடைபெற்ற சிறப்பு உரையாடலில் பேசிய போது பிரதமர் தெரிவித்தார்.
‘ ஆனால், உண்மையில் நாம் அனைத்து இனத்தின் மீதும் கவனம் செலுத்தி வருகிறோம். அனைத்து தரப்பும் சிறிதளவாவது திருப்தியடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.
“ மலாய்க்காரர்களின் ஆதரவு போனால், பக்காத்தான் தோற்றுப் போகும். அதே வேளையில், சீனர்களின் ஆதரவை இழந்தாலும் நாம் தோற்றுப் போவோம். பக்காத்தானின் வெற்றியை உறுதி செய்ய இந்தியர்களும் முக்கிய பங்களிக்கின்றனர். எனவே நாம் கவனமாக இருப்பது அவசியம்” என்றும் அவர் சொன்னார்.