புத்ரா ஜெயா, மே 9-
பல்வேறு சவால்களையும் கருத்து வேறுபாடுகளையும் எதிர்நோக்கிய போதிலும் நாட்டை சரியான தடத்திற்குத் திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் பக்காத்தான் ஹராப்பான் தொடர்ந்து ஒன்றிணைந்து பாடுபடும். இந்தக் கூட்டணி நிலைக்காது என்று கூறும் எதிர்தரப்பினரின் கணிப்புகளை இக்கூட்டணி தவிடுபொடியாக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
“இந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. இக்கூட்டணி எளிதில் உடைந்துவிடும் என பலரும் நினைத்திருந்தனர். ஆயினும், மலேசியாவை மீண்டும் அதன் பொற்காலத்திற்குத் திரும்பக் கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்களின் இலக்காக இருக்கிறது” என்று பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு உரையாடல் நிகழ்ச்சியின் போது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
பக்காத்தான் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களில் பலர் புதுமுகங்களாகவும் மேலும் சிலர் எதிர்க்கட்சியாக 60 ஆண்டுகள் இருந்தவர்கள் என்ற போதிலும் அனைவரும் சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றன்ர் என்றார் அவர்.
ஆயினும், அவர்கள் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். சில வேளைகளில் சில பிரச்னைகள் எழுவதுண்டு. ஒரு சிலர் இன்னும் தங்களை எதிர்க்கட்சியாகவே உணர்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.
என்னைப் பொறுத்த மட்டில் இதுவே ஒரு வெற்றியாகும். என்னை அவர்களுடைய தலைவராக ஏற்றுக் கொண்டதே ஒரு சிறந்த அடைவு நிலையாகும். மக்கள் இதை உணராதது போல் இருக்கின்றனர் என்று மகாதீர் குறிப்பிட்டார்.