கோலாலம்பூர், மே 8-
மேற்குக் கரை நெடுஞ்சாலை கட்டுமானப் பகுதியில் முதன்மை குழாய்கள் உடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பயனீட்டாளர்களுக்கு உதவ 10 நிரந்தர குடிநீர் தொட்டிகளும் 74 லாரிகளில் மூலம் தண்ணீரும் வழங்க விருப்பதாக சிலாங்கூர் குடிநீர் நிறுவனம் (ஆயர் சிலாங்கூர்) கூறியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவ பண்டார் சுல்தான் சுலைமானில் இரண்டு சேவை மையங்கள், பண்டார் பார்க்லேண்ட் மஸ்ஜிட் ரஹிமா, செக்ஷன் 16 மற்றும் பண்டார் புக்கிட் ராஜா ஆகியவற்றில் உள்ள பொதுக் குழாய்கள் பொது மக்களுக்கு பயனீட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளன என்று ஸ்பான் எனப்படும் தேசிய குடிநீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து 2006ஆம் ஆண்டு குடிநீர் சேவை தொழிற்துறை சட்டத்தின் செக்ஷன் 122 கீழ் ஸ்பான் விரிவான விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாக அவர் சொன்னார்.
குடிநீர் விநியோகத் தடையை நீக்கும் பொருட்டு குழாய்களைப் பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சார்லஸ் கூறினார்.