ஷா ஆலம், மே 13-
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ரமலான் மாதத்தில் குப்பைகளின் அளவு 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ரமலான் மாதம் தொடங்கியது முதல் நேற்று வரையில் கடந்த 7 நாட்களில் குப்பைகளின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது என்று கேடிஇபி திடக்கழிவு நிர்வாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
இவ்வாண்டு ரமலான் சந்தையில் கடைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதும் அதிகமானோர் வீட்டிற்கு வெளியே நோன்பு துறப்பதும் இந்த அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றார் அவர்.
“மேலும், சந்தையில் விற்கப்படும் உணவுகள் வீற்றுத் தீர்க்கப்படாததும் இந்த குப்பை அதிகரிப்புக்கு மற்றொரு காரணமாகும்” என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே, அதிக அளவிலான உணவுகள் விரயமாவதாகவும் மீதப்படும் உணவுகள் குப்பைத் தொட்டியில் வீசப்படுவதாகவும் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சிலாங்கூர்கினியிடம் ரம்லி தெரிவித்தார்.