ஷா ஆலம், ஜூன் 28-
புரோ உந்தாஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அக்லே மற்றும் கத்ரி ஆகிய இரு நெடுஞ்சாலைகளிலும் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் டச் அண்ட் கோ அட்டைக்கான மதிப்பை அதிகரிக்கும் சாவடிகள் அகற்றப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மதிப்பை அதிகரிக்கும் சாவடியில் வரிசையாகக் காத்திருக்கும் வாகனங்களால் ஏற்படும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக புரோ உந்தாஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ரோஸ்டாம் ஷாரிஃப் தாமி கூறினார்.
அக்லே நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோர் தங்கள் டச் அண்ட் கோ அட்டைகளின் மதிப்பை அக்லே நடவடிக்கை அலுவலகத்தில் உயர்திக் கொள்ளலாம் என்றார் அவர். அதே வேளையில் கத் ரி நெடுஞ்சாலை பயனீட்டாளர்கள் தங்கள் டச் அண்ட் கோ அட்டைகளின் மதிப்பை புக்கிட் ஜெலுத்தோங் டோல் சாவடி, எல்மினா ஓய்வு பகுதி மற்றும் லாகோங் அருகே உள்ள பேருந்து நிறுத்தப் பகுதியிலும் அதிகரித்துக் கொள்ளலாம் என்ற தகவலையும் ரோஸ்டாம் தெரிவித்தார்.