SELANGOR

எம்பிபிஜே 13ஆம் ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு இலவச சேவைகள்

ஷா ஆலம், ஜூன் 19:

பெட்டாலிங் ஜெயா மாநகரின் 13ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு இலவச சேவைகள் வழங்கப்படவிருப்பதாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்பிபிஜே) அறிவித்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா மாநகர வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு நல்கிய பொது மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநகரின் பல இடங்களில் இந்தக் கொண்டாட்டம் நடைபெறவிருப்பதாக எம்பிபிஜே ஓர் அறிக்கையில் கூறியது.

“நீச்சல் குளம், விளையாட்டு மைதானம் மற்றும் காற்பந்தாட்ட திடல் போன்றவற்றை 2 மணி நேரம் இலவசமாகப் பயன்படுத்த வாய்ப்பளிப்பதும் இந்தக் கொண்டாட்டத்தையொட்டி வழங்கப்படும் சலுகைகளில் அடங்கும்” என்றார் அவர்.
அதேவேளையில், கிளானா ஜெயா பயிர் நடவு பகுதியில் 1,000 இளங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவிருக்கின்றன. மேலும் ஸ்மார்ட் பிஜே திடக் கழிவு தீர்வு ஆய்வுக் கூடத்தில் 130 போத்தல்கள் உரம் இலவசமாக வழங்கப்படும் என்று எம்பிபிஜேவின் அந்த அறிக்கை தெரிவித்தது.

இவை தவிர்த்து, ஜூன் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் 50 வீடுகளில் மொத்தமாகக் குவிக்கப்பட்ட குப்பைகள் இலவசமாக அகற்றப்படும் என்றும் அவ்வறிக்கை கூறியது.


Pengarang :