ஜோகூர் பாரு, ஜூன் 21:
இரண்டு மாற்றுத் திறனாளி நண்பர்கள் ஒன்றிணைந்து தங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் வாகனம் ஓட்டுவதற்கு ஏதுவான எஹ்டிசி எனும் கைகளால் வாகனத்தை இயக்கும் சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.
முகமது அஃபிக் பார்னி ( வயது 30) மற்றும் ஹைருல் அனுவார் ( 42) ஆகிய இரு நண்பர்களும் 2017ஆம் ஆண்டு டபுள் எ புரோஜெக்ட் எனும் நிறுவனத்தை தோற்றுவித்து அதன் வழி நாடு முழுவதிலும் இதுவரை 70 எஹ்டிசி சாதனங்களை விநியோகித்துள்ளனர்.
முகமது அஃபிக் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கிராஃபிக் வடிவமைப்பில் டிப்ளோமா பெற்றுள்ள வேளையில் ஹைருல் அனுவார் ஒரு வாகன மெக்கானிக் ஆவார். இவ்விருவரும் முதுகு தண்டில் ஏற்பட்டுள்ள பலவீனம் காரணமாக உடல் ஊனமுற்றனர்.
2013ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் முகமது அஃபிக் பாதிப்புற்ற வேளையில், 2008ஆம் ஆண்டு ஒரு கட்டடத்தில் இருந்து கீழே விழுந்ததால் ஹைருல் அனுவார் ஊனமுற்றார்.
“பிறரின் உதவியின்றி மாற்றுத் திறனாளிகள் வாகனத்தை சொந்தமாக இயக்குவதற்கு உதவியாக இந்த சாதனத்தை நான் உருவாக்கினேன்” என்று முகமது அஃபிக் பெர்னாமாவிடம் விவரித்தார்.