கோலாலம்பூர், ஜூன் 10-
நாட்டிற்குள் அனுமதியின்றி நுழையும் கள்ளக் குடியேறிகளின் விவகாரத்தை நிர்வகிக்கவும் நடப்பில் உள்ள அமலாக்க முறையை மேலும் மேம்படுத்தவும் முழுமையான அமலாக்க நடவடிக்கை ஒன்றை உள்துறை அமைச்சு உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் மலிந்து கிடக்கும் கள்ளக் குடியேறிகள் பிரச்னையைக் களைய பல்வேறு அமைச்சுகளை ஈடுபடுத்தும் ஒரு வியூகத் திட்டமாக இது அமையும் என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கூறினார். கள்ளக் குடியேறிகள் பிரச்னையைத் துடைத்தொழிக்கும் இந்த நடவடிக்கையில் மாநில அரசுகள், ஊராட்சி மன்றங்கள், கிராம சமூக நிர்வாக மன்றங்கள் (எம்பிகேகே) கிராம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு செயற்குழு ஆகிய அமைப்புகள் உட்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
“நாட்டிலுள்ள கள்ளக் குடியேறிகளின் அன்றாட வாழ்க்கையில்
பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இவர்கள் பற்றிய மக்களின் விழிப்புணர்வு மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதும் இந்தத் திட்டத்தின் வியூக நடவடிக்கையாகும்” என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முகைதீன் குறிப்பிட்டார்.