ஷா ஆலாம், ஜூன் 18:
தம்மைத் தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய பாலியல் காணொளியை விநியோகித் தவர்கள் பிகேஆர் கட்சிக்குள் இருக்கும் தரப்பினர்தான் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி திட்டவட்டமாகக் கூறினார்.
“நான் இதனை முழுமையாக நம்புகிறேன்” என்று அந்தக் காணொளியை விநியோகித்தவர்கள் பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் தமக்கு எந்த அளவு நம்பிக்கை உள்ளது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இவ்விதம் பதில் அளித்தார்.
அரசாங்கம் மற்றும் அரசியலில் தமது அடைவு நிலையைத் தடுப்பதற்காக சில தரப்பினர் கையாண்ட மலிவான அரசியல் பாணியே இந்த சர்ச்சைக்குரிய பாலியல் காணொளி பரவல் நடவடிக்கை என்றார் பிகேஆர் துணைத் தலைவருமான அஸ்மின்.
“இந்த விவகாரத்திற்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். போலீசார் தங்களின் புலன் விசாரணையை மேற்கொள்ளட்டும். அவர்களின் விசாரணைக்கு இடையூறாக சிலர் அறிக்கை வெளியிடுவது நியாயமில்லை என்றே நான் கருதுகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
” இவ்விவகாரத்தில் மக்களே தண்டனை அளிக்கட்டும். இந்தச் சதித் திட்டம் மற்றும் அவதூறு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் யார் என்பதை யூகிப்பதற்கான வாய்ப்பு இப்போது அதிகரித்துள்ளது” என்றும் அஸ்மின் விவரித்தார்.