சிப்பாங், ஜூன் 17:
மிரட்டல் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று தனது வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு சென்ற பொருளாதார விவகார அமைச்சரின் அரசியல் செயலாளர் முகமது ஹில்மான் இடாம், அவ்வாறு செய்யத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் ஒருவரை உட்படுத்திய காணொளி வழக்கு குறித்து கடந்த வெள்ளிக்கிழமை புத்ராஜெயா காவல் நிலையத்தில் தான் அளித்த வாக்குமூலமே போதும் என்று போலீசார் தம்மிடம் கூறியதாக முகமது ஹில்மான் தெரிவித்தார்.
இன்று காலை 11.05 மணிக்கு பளுப்பு நிற புரோட்டோன் பெர்டானா காரில் சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குச் சென்ற ஹில்மான் ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த போலீஸ் நிலையத்திற்கு வெளியே வந்து அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசினார்.
முன்னதாக, சம்பந்தப்பட்ட காணொளிக்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி வன்மையாக மறுத்தார்.