கோலாலம்பூர், ஜூலை 4-
வாக்களிக்கத் தகுதி பெறும் வயதை 21இல் இருந்து 18ஆகக் குறைப்பது இளையோரின் குரல் தெளிவாகச் செவிமடுக்கப்படுவதற்கு வகை செய்வதோடு நாட்டின் உருவாக்கத்திற்கு அஸ்திவாரத்தையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இளையோர் எழுப்பியிருக்கும் விவகாரம் எதிர்காலத்தில் இச்சாரார் எதிர்நோக்கக்கூடிய பிரச்னையாகும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
“இளைஞர்களின் பிரச்னை மக்களின் பிரச்னை ஆகும். அரசியல் என்பது பணக்காரர்கள், நகர்ப்புற மக்கள் மற்றும் கல்வி கற்றவர்கள் ஆகியோருக்கு மட்டுமானதல்ல. அனைத்து தரப்பினரின் வாக்கும் நாட்டை ஆட்சி செய்யப் போகிறவர்களை முடிவு செய்யும்” என்றார் சைட் சாடிக்.
“இளைஞர்களைப் போலவே நீங்களும் உங்களின் 18 ஆவது வயதில் சிறந்த கல்வி முறை, உபகாரச் சம்பளம் மற்றும் வேலை வாய்ப்புகளைக் கோரியிருப்பீர்கள். அப்படியொரு வாய்ப்பு இளைஞர்களுக்கு இப்போது வழங்கப்படவில்லை. இதில் சிறிதும் நியாயம் இல்லை ” என்று ஆர்டிஎம் வானொலி தொலைக்காட்சியில் நேரடி அஞ்சல் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.