SELANGOR

புதிய குடிநீர் கட்டணம் பயனீட்டாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தாது!- மந்திரி பெசார் உறுதி

ஷா ஆலாம், ஜூலை 2-

கூட்டரசு அரசாங்கம் நிர்ணயிக்கும் குடிநீர் கட்டணத்தில் தமது தரப்பு மனநிறைவடையும் வரை புதிய குடிநீர் கட்டணத்தை மாநில அரசாங்கம் அறிவிக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய குடிநீர் கட்டணம் குறித்து மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்திடம் பேச்சு நடத்தி வருவதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“நாங்கள் மனநிறைவு கொள்ளும் வரை புதிய கட்டணத்தை அறிவிக்க முடியாது. பயனீட்டாளர்களுக்கு சுமையை ஏற்படுத்துமேயானால் அதனை நிச்சயம் ஒப்புக் கொள்ள முடியாது” என்றார் மந்திரி பெசார்.

” எனினும், மற்ற மேம்பாட்டு திட்டங்கள் பாதிக்கும் அளவுக்கு சுமையை ஏற்றுக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை” என்று இங்குள்ள ஷா ஆலாம் மாநாட்டு மையத்தில் இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட்டின் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
இந்த குடிநீர் கட்டண உயர்வால் பி40 பயனீட்டாளர்கள் பாதிக்கக் கூடாது என்று தமது தரப்பும் ஆயர் சிலாங்கூரும் பரிந்துரை செய்திருப்பதை அமிருடின் சுட்டிக் காட்டினார்.


Pengarang :