சிரம்பான், ஜூலை 11-
வாக்களிக்கும் வயதை 21லிருந்து 18ஆகக் குறைக்கவும், இயல்பாகவே வாக்காளராகப் பதிவு பெறுவதற்கும் கூட்டரசு சட்டமைப்பில் திருத்தத்தை பரிந்துரைத்துள்ள அரசாங்கம், ஜனநாயக நடைமுறை குறித்து 18 வயதினருக்கு போதிக்கப்படுவதையும் உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
பொதுத் தேர்தலில் வாக்களிப்பதால் விளையும் நன்மை, தீமைகள் குறித்து இளம் வாக்காளர்கள் அறிந்திருப்பது அவசியமாகும் என்று நெகிரி செம்பிலான் முதலீட்டு நடவடிக்கை, தொழிலற்துறை, தொழில் முனைவர், கல்வி மற்றும் மனித மூலதன செயற்குழு தலைவர் டாக்டர் முகமது ராஃபி அப்துல் மாலேக் கூறினார்.
“இது குறித்த கல்வி 15 வயதிலேயே தொடங்க வேண்டும். வாக்காளர் ஒருவரின் உரிமை மற்றும் கடமை குறித்து பள்ளிப் பருவத்திலேயே போதிக்கப்பட்டால் மட்டுமே அவர்களின் வாக்கு எத்தகைய முக்கியமானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள முடியும். மேலும், தவறான ஒருவருக்கு அவர்கள் அளிக்கும் வாக்கினால் நாட்டின் நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளையும் அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்” என்றார் அவர்.
“வாக்காளர்களின் வயது வரம்பைக் குறைப்பதில் நமக்கு பிரச்னை இல்லை. ஆனால் அவர்கள் தங்களின் உரிமைகளையும் பொறுப்பையும் உணர்ந்தவராக இருப்பது அவசியம். தரமான வாக்காளர்களாக அவர்கள் உருவாவது உறுதி செய்யப்பட்டால், தரமான தலைவர்களும் உருவாவர். எனவே, ஜனநாயகம் குறித்த கல்வியை உட்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அரசாங்கத்தின் பரிந்துரையை வரவேற்கிறோம்” என்றும் அவர் சொன்னார்.