கோலாலம்பூர், ஜூலை 5-
வீதி போராட்டத்தை ஒரு குற்றமாகக் கருதாத 2019 அமைதி பேரணி சட்ட திருத்த மசோதா மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது.
ஒவ்வொரு பேரணி நடைபெறுவதை அறிவிக்கும் காலத்தை ஐந்து நாட்களாகக் குறைக்கும் செயற்குழு நிலையிலான திருத்தத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரமே இது. இதற்கு முன்பு பேரணி நடத்தப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இது குறித்து அறிவிக்க வேண்டும் என்ற சட்ட விதியை 7 நாட்களாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
ஒவ்வொரு பேரணிக்கும் தேவையான பணியாளர்களை கடமையில் அமர்த்துவது உள்பட சம்பந்தப்பட்ட தரப்பினர் போதிய ஏற்பாடுகளைச் செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று இந்த சட்ட மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்து உரை நிகழ்த்துகையில் உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் குறிப்பிட்டார்.
“இதன் காரணமாகவே 10 நாள்களில் இருந்து 7 நாள்களுக்குக் குறைக்கும் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளும்படி நான் கேட்டுக் கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர் வழி மக்களின் குரலுக்கு நாம் எந்த அளவு அக்கறை காட்டுகிறோம் என்பதைப் புலப்படுத்த விரும்புகிறோம். இவர்களுக்கு அறவே அனுமதி வழங்காமல் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதற்காக 24 மணி நேரத்தில் வழங்க முடியாது. வெறு அறிக்கையாக இருந்தாலும் கூட அரசாங்கமான நாங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியம்” என்றார்.