கோலா லம்பூர் , ஆகஸ்ட் 30:
மலேசியாவில் அமைந்துள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்துலக விமானங்களுக்கான பயணிகள் சேவை கட்டணத்தை (பிஎஸ்சி) 50 ரிங்கிட்டுக்கு அரசாங்கம் குறைத்துள்ளது. இந்த நடவடிக்கையில் கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையம் இடம் பெறாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
புதிய கட்டண முறை வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறிய அந்தோணி லோக் இக்கட்டணம் கேஎல்ஐஏ2 விமான நிலையத்திற்கும் பொருந்தும் என விளக்கம் தந்துள்ளார். அக்டோபர் 1-ஆம் தேதி முதல் விமானங்களுக்கு 73 ரிங்கிட் செலுத்திய பயணிகள், அந்தந்த விமான நிறுவனங்களிலிருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்து விமான நிலையங்களிலும் உள்நாட்டு மற்றும் ஆசிய விமானங்களுக்கான பிஎஸ்சி கட்டணம் முறையே 11 ரிங்கிட் மற்றும் 35 ரிங்கிட்டில் பராமரிக்கப்படும்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கான கட்டணம் ஏன் குறைக்கப்படவில்லை என்று கேட்டதற்கு, லோக் அது ஓர் உயர் மதிப்பு மிக்க விமான நிலையம் என்று குறிப்பிட்டார்.
“கெஎல்ஐஏ ஒரு உயர் மதிப்பு மிக்க விமான நிலையம். உயர் மதிப்பு மிக்க விமான நிலையத்திற்கும் பிற விமான நிலையங்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிலையங்களின் உள்கட்டமைப்பின் நிலை வேறுபட்டது என்பதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.
வரும் காலங்களில், மலேசிய விமான ஆணையம் (மாவ்காம்) ஒரு கட்டமைப்பை உருவாக்க உள்ளதாகவும், அங்கு அனைத்து விமான நிலையங்களிலும் பிஎஸ்சி விகிதங்கள் அதன் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளைப் பொறுத்தும், ஒருங்கிணைந்த விகிதத்திற்கு மாறாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்