மலாக்கா, ஆக.20-
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜாலோர் கெமிலாங்கைக் கொண்டு ஆடையைத் தயாரித்து அணிந்த மார்டியா நசீருக்கு அதுவே தற்போது ஒரு தவிர்க்க முடியாத நடவடிக்கையாக அமைந்துள்ளது. குறிப்பாக, மெர்டேக்கா கொண்டாட்டத்தின்போது வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றும் ஒரு தொழிலாகவும் இது அவருக்கு மாறியுள்ளது.
ஐந்து குழந்தைகளுக்குத் தாயான மார்டியா, தன் பிள்ளைகளுக்கு மலேசிய கொடியைக் கொண்டு ஆடை தயாரித்து அழகு பார்த்தார். அந்நடவடிக்கை பலரையும் கவர்ந்தது.
தொடக்கத்தில் மூவருக்கு மட்டுமே இதுபோன்ற ஆடையைத் தயாரித்தார். ஆனால், இப்போது பலரும் இந்த ஆடைகளை விரும்பி இவரைத் தேடி வருகின்றனர்.
இவரின் இந்நடவடிக்கைக்கு இவரது கணவர் மற்றும் பெற்றோர் ஆதரவு வழங்கி வருவதால் தற்போது வெளியாட்களுக்கும் இந்த ஆடைகளை வடிவமைத்து தயாரித்து வருகிறார் மார்டியா.