கோலாலம்பூர், ஆக.14-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பண்டார் பாரு பாங்கி சந்திப்பின் அருகே நடந்த விபத்து தொடர்பான காணொளியை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செயததற்காக டத்தோ லோக்மான் நோர் அடாம் மீது விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பெமாந்தாவ் மலேசியா பாரு இயக்கத்தின் தலைவரான லோக்மான் மீது குற்றவியல் சட்டப் பிரிவு 504 மற்றும் தொடர்பு பல்லூடக சட்ட விதி 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் குற்றப் புலன் விசாரணை பிரிவின் தலைவர் எஸ்.ஏ.சி ஃபாட்சில் அகமது கூறினார்.
விசாரணை அறிக்கை நேற்று திறக்கப்பட்ட வேளையில், புக்கிட் அமானைச் சேர்ந்த குற்ற புலன் விசாரணைப் பிரிவு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை நடந்த சாலை விபத்து சம்பவத்தில் மரணமடைந்த நபரின் படத்தை பதிவேற்றம் செய்த லோக்மான், அச்சம்பவம் குறித்து பொது மக்கள் போலீஸில் புகார் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்..அதோடு, சந்தேக நபரின் மனைவியோடு தொடர்பு படுத்தும் தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹமிட் மற்றும் புலன் விசாரணை அதிகாரி ஆகியோரின் படங்களையும் லோக்மான் பதிவேற்றம் செய்துள்ளார்.