ஷா ஆலம், ஆக.14-
சிரம்பான், பந்தாய் ரிசோர்ட் உல்லாச தங்கும் விடுதியிலிருந்து காணாமல் போன அயர்லாந்து இளம் பெண் நோரா குவாய்ரினின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
“கடந்த 10 நாட்களாக நீடித்த நோரா காணாமல் போன சம்பவம் இறுதியில் மரணம் என்ற கரும்புள்ளியாக முடிவுற்றது மனதை வருத்துவதாக” அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.
“நோராவின் மரணத்தினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.
உல்லாச விடுதியை ஓட்டியுள்ள பகுதியில் நோராவைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வ படையினர் அப்பகுதியின் அருகே இருந்த ஓர் ஆற்றோரத்தில் நேற்றிரவு அவரது உடலைக் கண்டு பிடித்தனர்.