கோலாலம்பூர், ஆக.19-
தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்திற்கும் இடையே வித்தியாசம் ஏதும் இல்லை என்று குருடர்கள், செவிடர்கள் மற்றும் முட்டாள்கள் மட்டுமே கூறுவர் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
நடப்பு அரசாங்கம் பல்வேறு மாற்றங்களையும் வெளிப்படையான மற்றும் நேர்மையான நடவடிக்கைகளையும் அமல்படுத்தியுள்ள போதிலும் சில தரப்பினர் சில குறைகளை மட்டுமே பார்க்கின்றனர் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
“நாங்கள் 42 பில்லியன் வெள்ளி கடன் வாங்கினோமா? எங்களில் எவரேனும் 1எம்பிடியில் பங்கு பெற்றுள்ளோமா? நான் லஞ்சம் வாங்கியதாக நீங்கள் சந்தேகித்தால், என்னை நீதிமன்றத்தில் நிறுத்தி நிரூபியுங்கள்” என்றார் அவர்.
‘பிரதமர் பதவி இரண்டு தவணைகளுக்கு மட்டும் என்று நாங்கள் வரம்பு நிர்ணயிக்க உள்ளோம்? நஜீப் அதை செய்தாரா? நாங்கள் 1எம்டிபி குறித்து விவாதிக்கிறோம். தனது ஆட்சி காலத்தில் 1எம்டிபி மற்றும் இதர விவகாரங்கள் குறித்து விவாதிக்க நஜீப் அனுமதி அளித்தாரா? இல்லை. வேறுபாடு ஏதும் இல்லை என்று சொல்பவர் குருடராக, செவிடராக அல்லது முட்டாளாகத்தான் இருக்க முடியும்’ என்று மகாதீர் கூறினார்.