கோம்பாக், ஆகஸ்ட் 25:
நாட்டின் ஒருமைப்பாட்டு சின்னமாகத் திகழும் ஜாலூர் கெமிலாங்கைச் சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு கடுமையாக எதிர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, இனரீதியான பிரச்சினைகளை எழுப்பி வரும் தரப்பினர் மீதும் மாநில அரசாங்கம் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி எச்சரிக்கை விடுத்தார்.
ஒரு சில தரப்பினரின் இத்தகைய இழிவான செயல் சம்பந்தப்பட்டவர்களின் தெளிவற்ற சிந்தனை மற்றும் சித்தாந்தத்தைக் காட்டுகிறது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
இந்தத் தரப்புகளின் செய்லானது நாட்டில் இதுவரை கட்டிக் காக்கப்பட்டு வ்ரும் ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது என்று பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் நடைபெற்ற கோம்பாக் மாவட்ட ரீதியான சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு அமிரூடின் ஷாரி வலியுறுத்தினார்.
“இவர்களின் வாதம் எதுவாக இருப்பினும், நாட்டின் சுதந்திரம் மற்றும் நாட்டின் மீது நாம் கொண்டுள்ள விசுவாசத்தைக் களங்கப்படுத்தும் எதனையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.